March 24, 2012

இதுவரை நீ... இநீ


மணிக்கணக்கில் மடிந்து கிடக்கும் கணினிக்கிறுக்கன் நீ - சில
மணித்துளிகள் மங்கையோடும் களித்திடு இனி!
மடையன் போல் மன ஓட்டங்களோடு வலம் வரும் நீ
மயங்கிடு இவள் மடிதனில் முழு மனதோடு இனி!

பலசமயம் பளிச்சென்று சிரிக்கும் 'பல்லழகன்' நீ!
பாவை இவள் வந்துவிட்டாள் பத்திரம் இனி!!
பட்டங்கள் பலபெற்றும் பலனில்லை என்றாய் நீ!
பள்ளியறையில் இதுவரை படிக்காத பாடம் இனி!!

கன்னியரை கண்களாலே களவாடும் கயவன் நீ - உன்
கண்மணி இவளை கண்போல் காத்திடு இனி!
கணினியோடு காலம் கடத்தினாய் செல்வா நீ - இவள்
கனிவும் காதலுமே காலம் முழுதும் செல்வம் இனி!

December 03, 2011

உனக்காக மட்டும்...

அலைபேசியோடு அலைகிறேன்!!
தொலைபேசியோடு தொலைகிறேன்!
அலைவதிலும் தொலைவதிலும்தான்
எத்தனை பேரானந்தம்...
பேரழகே உனக்காக மட்டும்!.

செல்போனாக ஆசை...

அடுத்தப் பிறவியில் உனது
செல்போனாக வேண்டும்!
அழகே நீ அதையும்
அணைத்து வைத்திருப்பாயெனில்...

November 23, 2009

வாரம் ஒன்று வாழ்ந்து கண்டேன்...

தவங்கள் எதுவும் செய்ததில்லை - ஆனாலும்

வரங்கள் பல வாரித்தந்தான் அவன் - அவ்

வரமே ஒன்று... வந்தது இன்று...

வண்ணமான் போன்று உருவம் கொண்டு...

வருடம் பல நான் வாழ்ந்ததுண்டு...

வாழ்க்கை என்று நம்பிக் கொண்டு...

வாரம் ஒன்று வாழ்ந்து கண்டேன்...

வாழ்வில் இன்பம் பெண்தான் என்று...

November 19, 2009

இரு தினங்களில்...

இரு மனங்கள் இணைந்ததென்னவோ
இரு தினங்களில்தான்! - ஆனாலும்
இரு யுகங்கள் வாழந்தாற்போல்
இன்பம் மேலிடுகிறதே இருவருக்கும்!!.
இதுதான் காதல் என்பதோ?...

மூன்றாம் நாளில்...

மரணம் அடையாத என் மனதிற்கும்
மலர் வளையம் வைத்து விடுவாயோ!
முதல் நாளில் என் பேச்சை நிறுத்தினாய்!!
மூன்றாம் நாளில் எங்கே என்
மூச்சையே நிறுத்திடுவாயோ? - என்னை
மொத்தமாக முடித்து விடும் முடிவோடு நீ!.

நாலாம் நாளிலும்...

கொஞ்சம் பேசலாமென எண்ணினேன்! - அவள்
கொஞ்சும் பேச்சில் கொள்ளை போனேன்!!.
கொடியசைந்திருந்தால் கூட இன்னும்
கொஞ்சம் கொடூரமாய்த்தான் கேட்டிருக்கும்!
நாணலவள் நாணம் கொள்ளும் ஓசையிலோ
நாலாம் நாளிலும் நான் எனை மறந்தேன்!!.